தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1996-2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் இந்த 4 அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் தெரிவித்து, அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையீடு செய்திருந்தது.

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

இந்த நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை ரத்து செய்து, அதிமுக அரசு செய்த முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். காலதாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி சொத்துகுவிப்பு வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், 2002-2004 வரை மதுரை மேயராக இருந்த குழந்தை வேலு மீதான வழக்குகளையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்று, அமைச்சர்கள் துரைமுருகன், எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மொத்தம் 7 திமுக அமைச்சர்களின் சொத்துகுவிப்பு வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்