தெப்பத்திருவிழா ஸ்ரீரங்ககத்தில் பிப்.,27 தொடங்குகிறது.!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6ந் தேதி வரை நடைபெறுகின்றது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் சுவாமி ஹம்ச வாகனத்திலும், 2வது நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3வது நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4வது நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5வது நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6வது நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தெப்பத்திருவிழாவின் 7வது நாளன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.திருவிழாவின் 8வது நாளில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் அடுத்த மாதம் அதாவது மார்ச்.,5-ந் தேதி மாலை நடைபெறுகிறது.

சரியாக மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் அமைந்துள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு எல்லாம் வந்து சேருகிறார். இரவு 7.15 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு இரவு 7.30- 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். சரியாக இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு எல்லாம் சுவாமி புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கு செல்கிறார்.

author avatar
kavitha