தாயகம் திரும்பினார் வீர மங்கை “வினேஷ் போகத்”! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி தீபக் ஹூடா, சக மல்யுத்த வீரர், உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் வினேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் ..!
பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் இந்த ஆண்டு கோலாகலமாக ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வந்தது. இதில் 50.கி எடை பிரிவில் மகளீருக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விளையாடினார். மல்யுத்த போட்டியில், பெரும் கடினமான சவால்களையுடைய போட்டியை சந்தித்த அவர் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
அந்த நிலையில் இறுதி சுற்றுக்கு முன் உடற் எடை பரிசோதனையில் 100கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக வினேஷ் போகத் இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் குத்து சண்டை வீரர்கள், பிரபல நடிகைகள், ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக அப்போது குரல் கொடுத்தனர். இதனால், மிகுந்த வேதனையில் இருந்த வினேஷ் போகத் தான் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மேல் முறையீடு செய்த வினேஷ் போகத்..!
இறுதி போட்டிக்காக, அதற்கு முந்தய நாள் தனது எடையை குறைப்பதற்காக இரவு முழுவதும் உடற்பயிற்சி வினேஷ் மேற்கொண்டார். இதனால், நீர் சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், சிகிச்சை பெற்று வந்த அவர் அதிலிருந்து குணமடைந்தார்.
பின் இறுதி போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கமாவது அளிக்க வேண்டுமென விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் அப்போது ஒத்தி வைத்து, பின் இறுதியில் தள்ளுபடி செய்தனர். அதனை தொடர்ந்து வினேஷ் போகாத இன்று தாயகம் திரும்பி இருக்கிறார்.
மக்கள் மனதை வென்ற வினேஷ் போகத் ..!
ஒலிம்பிக் வரலாற்றில் மகளீர் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றிருந்தார். இறுதி போட்டியில் விளையாடி இருந்தால் கட்டாயமாக ஒரு தங்கம் அல்லது ஒரு வெள்ளிப் பதக்கம் உறுதி செய்திருப்பார். ஆனால், துரதிஷ்டவசமாக அது நடைபெறாமல் போனது. இதனால் அவர் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுமே சோகத்தில் ஆழ்ந்தது.
அவர் பதக்கம் வெல்லாவிட்டாலும் மக்களின் மனதை வென்றவர் என்ற காரணத்திற்காக அவரை கௌரவிக்க வேண்டும் என ஹரியானா அரசு முடிவு செய்தது. இதன் விளைவாக அவர் தாயகம் திரும்பும் பொழுது, ஒரு தங்கம் வென்ற வீரருக்கு எப்படி மரியாதையும், வரவேற்பும் கிடைக்குமோ அதே போல வினேஷ் போகத்திற்கும் கிடைக்கும் என ஹரியானா அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த வினேஷ் போகத்திற்கு ரசிகர்கள், அவரது உறவினர்கள், காங்கிரஸ் கட்சியின் எம்.பி தீபக் ஹூடா, சக மல்யுத்த வீரர், உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வினேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கோலாகலமாக ரசிகர்கள் வரவேற்பை கண்ட வினேஷ் போகத் கண்ணீருடன் கைகளை அசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. துரதிஷ்டவசமாக என்னால் வெற்றி பெற முடியவில்லை”, என சுருக்கமாக பேசினார். அவரை ரசிகர்கள் வரவேற்பதும், அவர் கண்ணீருடன் நன்றி தெரிவிப்பதும் என இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025