மில்கா சிங் ‘ஃபிளையிங் சிங்’ என அழைக்கப்பட என்ன காரணம்…? இவர் யார் …?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மில்கா சிங் பிரபலமான இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார். இவர் தனது வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்து பலராலும் பேசப்படக் கூடிய ஒரு நபராக திகழ்கிறார். பலராலும் பேசப்படக் கூடிய அளவுக்கு இவரது வாழ்க்கையின் சாதனைகள் என்ன? மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
பிறப்பு
மில்கா சிங், 1935, அக்டொபர், 8-ம் தேதி, பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் பிறந்தார். இவர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர். இவர் கல்வி பயில, தினமும் 20 கிமீ நடந்து சென்றுள்ளார். கால்கடுக்க நடந்தது தான், மில்கா சிங் தடகள வீரராக மாறியதற்கான ஆரம்பப் புள்ளி.
ஓடிவிடு மில்கா…!
மில்கா சிங்கின் 15 வயதின் போது, இந்தியப் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னாலேயே அவருடைய பெற்றோர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த கலவரத்தில், அவருடன் கூட பிறந்த மூன்று பேரையும் இழந்தார். இந்த நிலையில், மில்கா சிங்கின் தந்தை இறக்கும் தருவாயில், ‘ஓடிவிடு, இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக்கொன்று விடுவார்கள்’ என்று கூறினார்.
இந்த கலவரத்தின் போது கலவரக்காரர்கள் கண்ணில் படுகின்ற இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து தந்தையின் சொல்லைக் கேட்டு உயிருக்கு அஞ்சி, காட்டுவழியே ஓடிய மில்கா சிங், ஒரு ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பின் டெல்லியில் உள்ள தன் அக்காவின் வீட்டில் அடைக்கலமானார்.
ராணுவத்தில் மில்கா
இந்திய ராணுவத்தில் சேருவதற்காக மில்கா முயற்சி செய்தார். இவர், தனது நான்காவது வாய்ப்பில் இராணுவத்தில் இணைந்தார். அப்போது அங்கு நடைபெற்ற கிராஸ் கண்ட்ரி ஓட்டப்பந்தயத்தில், ஒரு டம்ளர் பாலுக்காக ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து, ராணுவத் தடகளப் பிரிவில் இணைந்தார்.
சாதனைகள்
1956 ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட மில்கா சிங், 400 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய அமெரிக்க வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ், என்னென்ன பயிற்சிகள் எடுக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, அடுத்த இரண்டு வருடங்களில் அந்த அமெரிக்கரின் டைமிங்கைத் தாண்டிக் காண்பித்தார்.
1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றார். அவரால், ஒலிம்பிக் போட்டிகளில் சரியாகச் செயல்படாததால், பயிற்சியாளரின் நம்பிக்கையை இழந்தார். இதனையடுத்து, இவர் மேலும் பல பயிற்சிகளை மேற்கொண்டு, 1958 கார்டிப்பில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் 400 மீட்டர் பிரிவில் 46.16 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 1958 -ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் 200மீ மற்றும் 400 மீ. க்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
இதனையடுத்து, மில்கா சிங் உலகின் அதிவேக எட்டு தடகள வீரர்களில் ஒருவராக இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு, நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நூலிழையில் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். இது அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
காமன்வெல்த்தில் ஒரு தங்கம், ஆசியன் கேம்ஸில் 4 தங்கங்கள் என ஒலிம்பிக்ஸைத் தவிர இதர சர்வதேசப் போட்டிகளில் மில்கா சிங் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
‘ஃபிளையிங் சிங்’ என பெயர் வர என்ன காரணம்?
மில்கா சிங், 1960ல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப்பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது பழைய நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார். ஆனால், அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார். அப்போட்டியானது, ‘பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் Vs மில்கா சிங்’ என விளம்பரப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, 7 பேர் கூடிய மைதானத்தில், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அப்துல் காலிக்கை தோற்கடித்தார். இந்நிலையில், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் ஜெனரல் அயூப்கான், பரிசளிப்பு விழாவில், ‘நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்’ என்று மில்காவைப் பாராட்டினார். இந்த விழாவில் தான், ‘ஃபிளையிங் சீக் (பறக்கும் சீக்கியர்)’ என்ற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, மில்கா சிங் கூறிய போது, பாகிஸ்தானில் ஓடும்போது, சிறு வயதில் என் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்துக்கு வந்தது’. மேலும் அப்போது எனது தந்தை என்னிடம் கூறியது ”ஓடு மில்கா, இல்லை உன்னையும் கொன்று விடுவார்கள், ஓடு மில்கா ” என்பது தான்என்று கூறியுள்ளார்.
பத்மஸ்ரீ
மில்கா சிங்கை கெளரவிக்கும் விதமாக அவரின் பிறந்த நாளை அரசு விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பின், 1959-ம் ஆண்டு, இந்திய அரசாங்கம், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் அவருக்கு அளித்தது.
திரைப்படம்
மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, ‘ரேஸ் ஆஃப் மை லைஃப்’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதை அறிந்த பல ஹிந்தி தயாரிப்பாளர்கள் மில்கா சிங்கிடம், படத்துக்கான அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி வரைக்கும் தரத் தயார். ஆனால், மில்கா சிங்கின் மகனும் கோல்ஃப் வீரருமான ஜீவ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
பிறகு, ‘ரங் தே பசந்தி’ படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு இவ்வாய்ப்பை அளித்து, படத்துக்கான உரிமையாக ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார் மில்கா சிங். மேலும், படத்தின் லாபத்தில் கிடைக்கும் 15 விழுக்காட்டை மில்கா சிங் தொண்டு நிறுவனத்துக்குத் தரவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
2013ஆம் ஆண்டு ‘பாக் மில்கா பாக்’ என்ற பெயரில் படம் வெளியானது. இத்திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் 164 கோடியை வசூலித்து சாதனைப் படைத்தது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில், இப்படம் குறித்து மில்கா சிங் பேசுகையில், ‘இப்படத்தின் மூலம் இந்தியாவில் இப்போது என்னை எல்லோருக்கும் தெரிந்து விட்டது’ என தெரிவித்துள்ளார்.
இறப்பு
மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பின் கொரோனா எதிர்மறை என பரிசோதனை முடிவுகள் வந்த பின் வீடு திரும்பிய மில்கா சிங், ஜூன் 18, 2021 (வயது-86) அன்று காலமானார். இவரது, மறைவு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மனைவியான முன்னாள் இந்திய பெண்கள் கைப்பந்து அணியின் கேப்டன் நிர்மல் மில்கா கவுரும் வைரஸால் பாதிக்கப்பட்டு, மொஹாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!
February 12, 2025![INDvENG 3rd ODI ENG won the toss](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/INDvENG-3rd-ODI-ENG-won-the-toss.webp)
அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!
February 12, 2025![rohit sharma and virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-and-virat-kohli.webp)
தலைவா வா., தலைவா! ரோஹித் ஓகே! விராட்? மோசமான ஃபர்ம்-க்கு பதிலடி கொடுப்பாரா ‘கிங்’ கோலி?
February 12, 2025![Rohit sharma - Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-sharma-Virat-kohli.webp)
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)