WorldCup2023:போராடிய இலங்கை.. தென்னாப்பிரிக்கா 102 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

#SAvSL

இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்  இழந்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலகக்கோப்பை தொடர் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று தென்னாப்பிரிக்கா vs இலங்கை அணிகளுக்கு இடையே 4-வது  லீக் போட்டி டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக தேம்பா பவுமா, குயின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில்  தேம்பா பவுமா 8 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் குயின்டன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென்  இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை 4 புறமும் பறக்கவிட்டனர். இந்தக்கூட்டணியை பத்திரனா பிரித்தார்.  பத்திரனா  வீசிய பந்தை தனஞ்சய டி சில்வா- விடம் கேட்சை கொடுத்து  குயின்டன் டி காக் 84 பந்துகளில் ( 3 சிக்ஸ், 12 பவுண்டரி) சதம் அடித்து விக்கெட்டை இழந்தார். இவர்களின் கூட்டணியில் 204 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் ராஸ்ஸி வான் டெர் டுசென்  அவருடன்  மார்க்ராம் சேர்ந்து அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனிடையே, வான் டெர் டுசெனும் சிறப்பாக விளையாடி  110 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். தென்னாபிரிக்காவில் குயின்டன் டி காக், வான் டெர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகிய மூன்று பேரின் அதிரடியான சதத்தால் 50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் இழந்து 428 ரன்களை குவித்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து, 429 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பதும் நிஷாங்கா மற்றும் குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர். பதும் நிஷாங்கா 3 பந்தில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். பின்னர் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். அதிரடியாக விளையாட மறுபுறம் குசல் பெரேரா நிதானமாக விளையாடி 7 ரன் எடுத்து வெளியேறினார். தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இருவருமே ஏமாற்றத்தை கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி  42 பந்துகளில் 76 ரன்கள் விளாசினர். அதில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி அடங்கும். பின்னர் களமிறங்கிய சாரித் அசலங்கா 65  பந்தில் 79 ரன்கள் குவித்தார்.  அதில் 4 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் அடங்கும். சாரித் அசலங்கா விக்கெட்டை இழந்த போது இலங்கை 232 ரன்னிற்கு 6 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. அப்போது மத்தியில் களம் கண்ட  தசுன் சானக்க  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  அரைசதம்  விளாசினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் சற்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.

அரைசதம்  அடுத்த சில நிமிடங்களில் தசுன் சானக்க மகாராஜ் வீசிய பந்தில் போல்டாகி 68 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இறுதியாக இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்  இழந்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டையும், கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன்,  தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.

50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்த அணி என்ற வரலாறு சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. கடைசியாக 2015ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அடித்திருந்த 417 ரன்களே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்