இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!
கொல்கத்தா போன்ற பெரிய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என நெகிழ்ச்சியாக ரஹானே கூறியுள்ளார்.

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடந்த ஆண்டு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது என்று சொல்லலாம். அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டும் அவர் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை அணி விடுவித்தது.
எனவே, அவர் கொல்கத்தா அணியில் இல்லை என்ற காரணத்தால் எந்த வீரர் கேப்டனாக வழிநடத்தப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்தது. ஒரு பக்கம் அணியில் இளம் வீரராக கலக்கி கொண்டு இருக்கும் ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இதற்கு விளக்கம் வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வமாக யார் கேப்டன் என்று அறிவித்தால் தான் தெரியவரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது 2025 ஐபிஎல் (IPL) சீசனுக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, அஜிங்க்யா ரஹானேவை கேப்டனாக அறிவித்தது.
அஜிங்க்யா ரஹானே 1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் அவர் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதாலும் அவரிடம் கேப்டன் பொறுப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவை கொல்கத்தா நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
கேப்டன் அனுபவம்
ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணிக்கு கேப்டனாக விளையாடுவது என்பது ரஹானேவுக்கு புதிதான விஷயம் இல்லை. ஏனென்றால், இதற்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் (RPS) அணிகளுக்கு 2017 முதல் 2019 வரை கேப்டனாக விளையாடியிருக்கிறார். மொத்தம் 25 IPL போட்டிகளில் கேப்டனாக அவர் விளையாடியுள்ள நிலையில், அவருடைய தலைமையில் 9 முறை அணி வெற்றியும், 16 முறை தோல்வியையும் சந்தித்துள்ளது.
2018 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பிளேஆஃபுக்கு அழைத்துச் சென்றதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. அனுபவம் அதிகமாக இருக்கும் காரணத்தால் அவர் மீது அணி நிர்வாகம் பெரிய நம்பிக்கையும் வைத்திருக்கிறது. எனவே, அவர் கேப்டனாக எப்படி விளையாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கேப்டனானது குறித்து ரஹானே
கேப்டனாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பேசிய ரஹானே ” ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான கேகேஆரை வழிநடத்தும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது ஒரு மரியாதை கூறிய விஷயமாக பார்க்கிறேன். எங்களிடம் ஒரு சிறந்த மற்றும் சமநிலையான அணி இருப்பதாக நான் நினைக்கிறேன். அனைவருடனும் இணைந்து பணியாற்றவும், எங்கள் பட்டத்தை பாதுகாக்கும் சவாலை ஏற்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனவும் நெகிழ்ச்சியுடன் ரஹானே தெரிவித்துள்ளார்.
🚨 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 – Ajinkya Rahane named captain of KKR. Venkatesh Iyer named Vice-Captain of KKR for TATA IPL 2025. pic.twitter.com/F6RAccqkmW
— KolkataKnightRiders (@KKRiders) March 3, 2025