“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்த சர்ச்சைக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா பதிலளித்துள்ளார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை (மார்ச் 4 ஆம் தேதி) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக தனது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. எனவே, இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்திய அணி வலுவாக வெற்றி பெறுவதைக் கண்டு, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான்கள் தங்களது கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிக்கு முன்பு, இந்திய கேப்டன் இந்த சர்ச்சை குறித்து தனது மௌனத்தைக் கலைத்து, கேள்வி எழுப்பியவர்களுக்குப் பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளார். துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, “இது துபாய்.. இது எங்கள் Home (சொந்த ஊர்) கிடையாது. அரையிறுதியில் எந்த மைதான Pitch-ல் விளையாடப் போகிறோம் என எங்களுக்கே தெரியாது.
இந்த மைதானம் எங்களுக்கும் புதிதுதான், நாங்கள் இங்கு நிறைய போட்டிகள் விளையாடியதில்லை. நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில், ஆரம்பத்தில் பந்து சற்று ஸ்விங் ஆனதைக் கண்டோம். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் எங்கள் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது இது காணப்படவில்லை.
முந்தைய ஆட்டத்தில் அதிக சுழல் இல்லை, ஆனால் நியூசிலாந்தின் ஆட்டத்தில், நிறைய சுழல் காணப்பட்டது. இதன் பொருள் ஒவ்வொரு மேற்பரப்பிலும் வித்தியாசமான ஒன்று நடக்கிறது. எனவே, மைதானத்தில் என்ன நடக்கப் போகிறது, என்ன நடக்காது என்பது எங்களுக்குத் தெரியாது. அது எதுவாக இருந்தாலும், நாம் நம்மை மாற்றியமைத்துக்கொண்டு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்”என்றார்.