#IPL2020 : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி ! முதல் இடம் பிடித்த பெங்களுர்

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற 15-வது ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஸ்மித் ,பட்லர் ஆகியோர் களமிறங்கினார்கள்.ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலே பெங்களூர் வீரர் உடனா பந்துவீச்சில் ஸ்மித் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து பட்லர் 22 ரன்களில் சைனி பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.ஓரளவு பொறுப்பாக விளையாடிய மகிபல் லொம்ரோர் 47 ரன்களில் வெளியேறினார்.பின்னர் வந்த சாம்சன் 4 ரன்கள் ,உத்தப்பா 17 ரன்கள் , பராக் 16 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தது.களத்தில் ஆர்ச்சர் 16 ரன்கள் , திவாட்டியா 24 ரன்களுடன் இருந்தனர். பெங்களூர் அணி பந்துவீச்சில் சாகல் 3 விக்கெட்டுகள் ,உடனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.இதையடுத்து 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர் பின்ச் 8 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இதன் பின்னர் விராட் மற்றும் படிக்கல் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை நன்கு உயர்த்தினர் .அபாரமாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். ஆனால் படிக்கல் 63 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசியாக பெங்களூர் அணி 19.1 ஓவர்களில் 158 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. களத்தில் விராட் 72 * ,வில்லியர்ஸ் 12 * இருந்தனர்.ராஜஸ்தான் பந்துவீச்சில் ஆர்ச்சர்,கோபால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதன் மூலம் பெங்களூர் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்தில் உள்ளது.