ரஞ்சி ட்ராபியில் 379 ரன்கள் குவித்து ப்ரித்வி ஷா, சாதனை.!
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா, ரஞ்சி ட்ராபியில் 379 ரன்கள் குவித்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் தொடரில் அசாமுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா, 379(383) ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் மும்பை அணி வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் தொடக்க வீரரின் அதிகபட்ச ஸ்கோராகவும் ப்ரித்வி ஷாவின் 379 ரன்கள் பதிவாகியுள்ளது.
ரஞ்சி ட்ராபி வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை ப்ரித்வி ஷா அடித்துள்ளார், பௌசாகேப் நிம்பல்கர் 443* ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம், ரஞ்சி கோப்பையில் முச்சதம், விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதம், மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ப்ரித்வி ஷா பெற்றுள்ளார்.