தோனி-ராயுடு ஜோடியின் அதிரடி ஆட்டத்தால்,பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது.
பெங்களூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 68 ரன்களும், டி காக் 53 ரன்களும் எடுத்தனர்.
206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 74 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தோனி – ராயுடு ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
82 ரன்களைக் குவித்த ராயுடு ரன்அவுட்டாகி வெளியேறினார். 19 புள்ளி 4 ஓவர்களில் சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.தோனி 70 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ், 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிராக 205 ரன்கள் எடுத்தும் தோல்வி தழுவியதற்கு தன்னுடைய கேப்டன்சி கோளாறுகள் மீது கவனம் செலுத்த வேண்டிய கோலி, கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதை சாடுகிறார்.
சாஹல், உமேஷ் யாதவ் இருவரையுமே 15 ஒவர்களுக்குள் முடித்து விட்டு கடைசியில் இரண்டு பவுலர்கள் மட்டுமே வீசினால், என்ன ஆகும், வெரைட்டி இல்லாத பந்து வீச்சை தோனி என்ன செய்வார் என்று தெரியாதா கோலிக்கு? அதுதான் நடந்தது. கொலின் டி கிராண்ட்ஹோம் என்று ஒருவர் பந்து வீசுவார் என்ற நினைப்பேயில்லாத ஒரு கேப்டன்சி எப்படி வெற்றி பெற முடியும்?