#IPL BREAKING: கடைசி ஓவர் திக் திக்..போராடி வீழ்ந்த கொல்கத்தா..! லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs LSG போட்டியில், லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக, நிக்கோலஸ் பூரன் 58 ரன்களும், குயின்டன் 28 ரன்களும், பிரேரக் மன்கட் 26 ரன்களும், ஆயுஷ் படோனி 25 ரன்களும் குவித்துள்ளனர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கொல்கத்தா அணியில் முதலில் களமிறங்கிய ஜேசன் ராய், வெங்கடேச ஐயர் ஜோடி நல்லத் தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இதில் பொறுப்பாக விளையாடிய வெங்கடேச ஐயர் 24 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
சிறுது நேரத்தில் ஜேசன் ராயும் ஆட்டமிழக்க, குர்பாஸ் மற்றும் ரிங்கு சிங் தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் எடுத்தனர். குர்பாஸை தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை இழந்தனர். ஆனால் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் இறுதிவரை போராடியும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. முடிவில், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 67* ரன்களும், ஜேசன் ராய் 45 ரன்களும், வெங்கடேச ஐயர் 24 ரன்களும் குவித்தனர். லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் மற்றும் யாஷ் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.