இந்தியாvs வங்காளதேசம் :டி20 உலகக்கோப்பையின் கடைசி பயிற்சி போட்டியில் இன்று வங்கதேச அணியும், இந்திய அணியும் மோதியது. மேலும், இது பயிற்சி போட்டி என்பதால் விராட் கோலி இந்த போட்டியில் இடம்பெறாமல் இருந்தார். இந்த பயிற்சி போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா சற்று சிறப்பாகவே விளையாடினார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் களமிறங்கி அட்டகாசமாக விளையாடினார்.
அவர் அதிரடியாக விளையாடி 32 பந்துக்கு 53 ரன்கள் எடுத்து, இது பயிற்சி போட்டி என்பதால் ரிட்டையர் (Retired Out) ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் 31 ரன்கள், சிவம் துபே 14 ரன்கள், ஹர்திக் பாண்டியா அபாரமாக விளையாடி 23 பந்துக்கு 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை விளையாடினார்.
இதனால் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். இதனால், 183 என்ற இலக்கை எடுக்க களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. இந்தியா அணியின் சிறப்பான பந்து வீச்சின் காரணமாக 4 ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுக்க முடியாமல் வங்கதேச திணறி வந்தது. மேலும், 10 ஓவருக்குள் 50 ரன்களை கூட தாண்ட முடியாமல் 5 விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பிறகு ஷகிப் அல் ஹசனும், மஹாமுதுல்லாவும் இணைந்து பொறுமையாக தட்டி தட்டி ரன்களை சேர்த்தனர். ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் அவர்களால் பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாறினர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் காரணமாக இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். மேலும், இந்திய அணியில் சிவம் துபே, அர்சதீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதே போல் வங்கதேச அணியில் அதிகபட்சமாக முஹமதுல்லா 40 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா அணி தனது முதல் டி20 லீக் போட்டியை அயர்லாந்து அணியுடன் வருகிற ஜூன்-5ம் தேதி அன்று இரவு 8 மணிக்கு நியூயோர்க்கில் மோதவுள்ளது.