RRvsCSK : சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சென்னை… தோல்வியில் இருந்து மீளுமா?
சென்னையும் ராஜஸ்தான் அணியும் இதுவரை 29 முறை மோதியுள்ள நிலையில், சென்னை 16 முறையும், ராஜஸ்தான் 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி எதிர்கொள்ளவுள்ளது. ஆனால், சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி, இந்தப் போட்டியில் தோல்வியின் பிடியிலிருந்து மீண்டு வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஏனென்றால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலே சென்னை அணி கடைசி வரை தடுமாறி தான் மும்மை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது. அதற்கு அடுத்த போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொண்ட நிலையில், அதில் தோல்வி அடைந்தது. எனவே, தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவிருக்கிறது.
ராஜஸ்தான் அணி, சென்னைக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று அசத்தலான பார்மில் உள்ளது. இதுவரை இரு அணிகளும் 29 முறை மோதியுள்ள நிலையில், சென்னை 16 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 13 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சமீப காலமாக சென்னையின் சேஸிங் திறன் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, டாஸ் வென்றால் கூட ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து அதிகமான ரன்கள் குவிக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட 175 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து சென்னை வெற்றி பெறவில்லை.பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கூட இது தெளிவாக தெரிந்தது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 197 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியடைந்தது. எனவே, இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 200 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது என்றால் அந்த ரன்களை சென்னை எப்படி சேஸ் செய்யும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.