4-வது டெஸ்ட்:மழையால் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதிப்பு …!
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இரு அணிகள் மோதும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது.
இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 193,பண்ட் 159*,ஜடேஜா 81,அகர்வால் 77 ரன்கள் அடித்தனர்.
இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 83.3 ஓவர்களில் 6விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமா ஹாரிஸ் 79 ரன்கள் அடித்தார்.களத்தில் கம்மின்ஸ் 25*,பீட்டர் 28 *ரன்களுடன் உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சில் குலதீப் 3,ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.இதன் பின் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் பின்தங்கியது.
322 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு ‘பாலோ-ஆன்’ வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால், ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 4ம் நாள் ஆட்டத்தை பாதியில் ரத்து செய்வதாக போட்டி நடுவர்கள் தெரிவித்தனர்,