இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தற்காலிக குழு நியமனம்..!

மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பரான சஞ்சய் குமார் மல்யுத்த தலைவர் தேர்தலில் நின்றார்.

சமீபத்தில் மல்யுத்த தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்க்கு மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சஞ்சய் குமார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்  சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அதேபோல இந்திய மல்யுத்த வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பஜ்ரங் புனியா தனது  பத்மஸ்ரீ விருதை  திருப்பி அளிப்பதாக அறிவித்தார்.

இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு தற்காலிகக் குழு உருவாக்கப்பட்டது. இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்காக மூன்று பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று அமைத்துள்ளது.

அதில் புபேந்திர சிங் பஜ்வா தலைவராகவும், எம்.எம். சோமயா ஒரு உறுப்பினராகவும், மஞ்சுஷா கன்வார் மற்றொரு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் பல்வேறு பணிகள் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு வீரர்கள் தேர்வு செய்தல், சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களின் பெயர்களை அனுப்புதல், விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், வங்கி கணக்குகளை நிர்வகித்தல் ஆகிய பணிகளை செய்யவுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்