கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு.

கொரோனா வைரஸ் பாதிப்பானது ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் காவலர்கள், விமான ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், மக்களவையின் நான்காம் நாள் கூட்டமான இன்று, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து எழுத்துபூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இதுவரை ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரிந்த 3,573 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த  நிரந்தரப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், தற்காலிக பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ 90 ஆயிரம் அல்லது இரண்டு மாத ஊதியமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் , ஏர் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 17 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவர்களுக்கென்று தனியாக சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.