சமரசம் செய்த நேரத்தில் மீண்டும் தூண்டிவிட்ட சசிகுமார்… ட்ரெண்டாகும் பருத்திவீரன்.!

இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல் ராஜா பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜாவின் பேச்சை கண்டித்து சசிகுமார்,சமுத்திரக்கனி, சினேகன், கரு.பழனியப்பன், பாரதி ராஜா என பலரும் அறிக்கையை வெளியிட்டனர். இது பற்றி எதற்காக இன்னும் ஞானவேல் ராஜா விளக்கம் அளிக்கவில்லை மன்னிப்பும் கேட்கவில்லை? என பலரும் கேள்விகளையும் எழுப்பினர்.

அதன் பிறகு இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில்,  ” பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.

சிவகுமார் கண்டிக்க மாட்டாரா? ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்கணும் – கரு. பழனியப்பன் காட்டம்!

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து இந்த விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததாக நினைக்கப்பட்ட நிலையில், சசிகுமார் அறிக்கை ஒன்றை வெளியீட்டு ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அதில் “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? ‘நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்…’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா.

அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்’ என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?
இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?” எனவும் தன்னுடைய கேள்விகளை எழுப்பி இருக்கிறார். பிரச்சனை ஒரு வழியாக முடிந்து விட்டது என எதிர்பார்த்த நிலையில் அவர் மீண்டும் தனது கேள்விகளை எழுப்பி இருப்பதால் பருத்திவீரன் மீண்டும் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசியதாவது ” அமீர் நல்ல இயக்குனர் தான் ஆனால் அவர் ஒரு திருடர். பருத்திவீரன் படம் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக பணம் செலுத்தி எடுக்கப்பட்ட படம் என்ற பொய்யான காரணத்தை காட்டி என்னிடம் இருந்து பணத்தை ஏமாற்றிவிட்டார். பணத்தை அவர் திருடி சம்பாதிக்கிறார்” என அமீரை திருடன் என கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இதன் காரணமாக தான் இந்த விவகாரம் இந்த அளவிற்கு பெரிய பிரச்சனையாக வெடித்தது. மேலும், ஞானவேல் ராஜா பேசியதற்கு அமீர் ” “பருத்திவீரன்” படம் தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை.அனைத்தும், பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.