நடிகை சித்ராவின் மறைவு.!ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு.!

மறைந்த சித்ரா ஹேமந்த் அவர்களை திருமணம் செய்து 2 மாதங்களே ஆன நிலையில் அவரது மரணம் குறித்து விசாரிக்க ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சித்ரா ,தனது சீரியலின் படப்பிடிப்பிற்காக வருங்கால கணவரான ஹேமந்த் ரவியுடன் சென்னை அருகிலுள்ள நாசரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் . இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதும், ஜனவரியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த ஓட்டலின் அறையில் தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அதனை தொடர்ந்து சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து அவரது மரணம் கொலையா ?தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாவதாக சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த ஹேமந்துடன் நடத்திய விசாரணையில் அவரும் ,சித்ராவும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார் .

நாசரேத்பேட்டை போலீசார் ஒரு புறம் விசாரணை மேற்கொண்டு வர, தற்போது சித்ராவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

அதாவது திருமணமான பத்து ஆண்டுகளுக்குள் சந்தேகப்படும்படி மரணமடையும் பட்சத்தில் ஆர்டிஓ விசாரணை நடத்த உத்தரவிடப்படும் .அந்த வகையில் சித்ரா அவர்கள் ஹேமந்தை திருமணம் செய்து இரண்டு மாதங்களே ஆனதாக கூறப்படும் நிலையில் சித்ராவின் மரணத்திற்கும் ஆர்டிஓ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.