மாநிலங்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்வு!

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 12 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வெளியிட்டு இருந்த நிலையில், வேட்புமனுக்கள் பிப்.8ம் தேதி முதல் பிப்.15ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டு நிறைவு பெற்றது.

பேச்சுவார்த்தைகள் தோல்வி.. மீண்டும் டெல்லி நோக்கி பேரணி..!

இதன்பின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பிப்.16ம் தேதி நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், 12 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், காங்கிரஸ் மூத்த  தலைவர் சோனியா காந்தி உள்ளிட் 41 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 41 பேரில் பாஜக 20 எம்பிக்களுடன் முன்னிலை வகிக்கிறது. அதன்படி, பாஜக அதிகபட்சமாக 20 இடங்களை வென்றுள்ளது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் (6), திரிணாமுல் காங்கிரஸ் (4), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (3), ஆர்ஜேடி (2), பிஜேடி (2) மற்றும் என்சிபி, சிவசேனா, பிஆர்எஸ் மற்றும் ஜேடி- யூ தலா 1 என மொத்தம் 41 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசிய ஜேபி நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசாவில் இருந்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து இணையமைச்சர் எல் முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபோன்று ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.

எனவே, உத்திரபிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4 மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 1 உட்பட மீதமுள்ள 15 இடங்களில் முடிவுகள் வெளிவரவில்லை, ஆனால், உபியில் 7 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், மாநிலங்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் பிப்ரவரி 27ம் தேதி முறையாக அறிவிக்கப்படும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment