பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே? – கீதாஜீவன்

Where has the person who shed glycerine tears for women's safety gone? Geethajeevan question.

geetha jeevan

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்? கீதாஜீவன் கேள்வி.

மணிப்பூரில் தொடர் வன்முறையில் நடந்து வரும் நிலையில், பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்து சென்ற வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

மேடையில் பேசுபவர்கள், ஊடகங்களில் விவாதிப்பவர்கள், சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் அஆகியோர் பொதுவான முறையில் பெண்களை குறித்து பேசினாலும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தாலும் உடனடியாக தானாக முன்வந்து அதனை விசாரிக்கிறது தேசிய மகளிர் ஆணையம். பேசுவதற்கே இத்தனை கடமையை உணர்ச்சியுடன் செயல்பாடு என்றால் மணிப்பூரில் மாதக்கணக்கில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூர பாலியல் தாக்குதல் மீதான நடவடிக்கை என்ன? இத்தனை நாளாக கண்டும் காணாத விதமாக இருந்தது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்? பாஜகவிலும் மகளிர் பிரிவு இருக்கிறது. அதன் தேசிய அளவிலான தலைவராக இருக்கக்கூடியவர் என்ன செய்து கொண்டிருந்தார்? நாட்டில் வாழும் அத்தனை பெண்களின் நெஞ்சிலும் தங்களால் இனி பாதுகாப்பாக வாழ முடியுமா? என்ற அச்ச உணர்வை  இந்த சம்பவம் விதைக்கின்றன.

ஒட்டுமொத்த இந்திய பெண்களின் நலனை கருதியும், மணிப்பூர் மாநில பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய மகளிர் ஆணையம் கண்களைத் திறந்து பார்த்து இது தொடர்பாக கடமையை விரைந்து மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.