இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டு வியூகங்களை வகுத்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிரச்சனை இருந்து வருகிறது.

இதுபோன்ற சூழலில் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் யாதவ், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் கைகோர்த்தார். இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதுபோன்று, இந்தியா கூட்டணியில் தான் நீடிக்கிறோம், ஆனா எங்களது மாநிலத்தில் தனித்து தான் போட்டியிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்தன.

காங்கிரஸ் சாம்பலாக்க நினைத்த நிலக்கரியை பாஜக வைரமாக மாற்றியுள்ளது.! – நிர்மலா சீதாராமன்.!

இதனால், இந்தியா கூட்டணியில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடந்து வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து உத்தரபிரதேசத்தின் ராஷ்டிரிய லோக் தளம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியமானது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தனது கட்சி இணையப் போவதாக ராஷ்டிரிய லோக் தளம் (RLD) தலைவர் ஜெயந்த் சவுத்ரி உறுதிப்படுத்தினார். அதன்படி, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு மக்களவையில் 2 இடமும், மாநிலங்களவையில் ஒரு இடமும் ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், பல்வேறு பதவிகள் வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இன்று முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் உட்பட மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள சவுத்ரி சரண் சிங் பேரன் தான் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment