நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி!

பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பின் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். பின்னர் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

கடந்த மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தார். கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் பாஜக ஆதரவுடன் 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, இன்று பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பீகார் சட்டப்பேரவை சபாநாயகரை நீக்கும் தீர்மானம் வெற்றி!

அந்தவகையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று அம்மாநில சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றது. அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பில் 129 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை பெற்று, பெரும்பான்மையை நிதிஷ் குமார் நிரூபித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையில் பீகார் சட்டசபை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 112 உறுப்பினர்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan

Leave a Comment