ஐபிஎல்-ஐ குறிவைக்கும் சவூதி அரேபியா.! 5 பில்லியன் டாலர் முதலீடு.?

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில், இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் கடந்துவிட்டன. இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) கட்டுப்பாட்டில் இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து இரண்டு மாதங்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருவார்கள். இது உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் தொடரில் மிக முக்கியமானதாகும். மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் லாபகரமான கூட்டமைப்பாகவும் ஐபிஎல் இருந்து வருகிறது.
இப்படி லாபம் தரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, மேலும் விரிவுபடுத்த சவூதி அரேபிய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. அதில் அதிக அளவு முதலீடு செய்யவும் சவுதி அரேபிய மன்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு சவுதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மான் கூறுகையில், ஐபிஎல் கூட்டமைப்பை 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஹோல்டிங் நிறுவனமாக மாற்றலாம் எனவும், அதில் 5 மில்லியன் டாலர் அளவுக்கு சவுதி அரேபியா அரசு முதலீடு செய்ய விருப்பம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் கட்டமைப்பானது மற்ற நாடுகள் வரை விரிவடையச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மான் இதற்கு முன்னர் இந்தியா வந்தபோது கூட ஐபிஎல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபிய அரசு ஏற்கனவே, கால்பந்தாட்டம், கோல்ப் ஆகிய விளையாட்டுகளிலும் முதலீடு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) நடத்தும் இந்த போட்டியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க முடியும். இதுவரை சவுதி அரேபியா இளவரசர் கூறியது பற்றி BCCI எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.