கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானார்.!
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், வாடிகனில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவருமான போப் பிரான்சிஸ் (Pope Francis) தனது 88வது வயதில் இன்று காலமானார். போப் காலமானார் என்ற செய்தியை வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், இருதரப்பு நிமோனியாவால் (double pneumonia) பாதிக்கப்பட்டு, ஐந்து வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். மார்ச் 23-ம் தேதி அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இவர், இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்தார்.
நேற்றைய தினம் கூட , ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு புனித பேதுரு சதுக்கத்தில் தோன்றி, “உர்பி எட் ஒர்பி” (Urbi et Orbi) ஆசீர்வாதத்தை வழங்கினார். ஆனால், அவரது உடல்நலம் மோசமடைந்ததால், அடுத்த வாடிகன் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7:35 மணிக்கு வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.தற்பொழுது, உலகம் முழுவதும் இவரது மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
போப் பிரான்சிஸ்
இவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவரும், முதல் லத்தீன் அமெரிக்க போப்பாகவும் பதவி வகித்தவர். இவரது ஆட்சிக்காலம் (2013-2025) சீர்திருத்தங்கள், சர்ச்சைகள், மற்றும் மாற்றங்களால் நிறைந்ததாக இருந்தது. இத்தாலிய குடியேறிய குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதில் ஒரு நுரையீரல் அகற்றப்பட்டதால் உடல்நலப் பிரச்சினைகளை அவதிப்பட்டு வந்தார்.
இருப்பினும், இவர் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து, ஜேசுட் (Jesuit) சபையில் இணைந்து, 1969இல் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். 1998இல் புவனஸ் அயர்ஸின் ஆயராகவும், 2001இல் கர்தினாலாகவும் உயர்ந்தார். 2013இல், முன்னாள் போப் பெனடிக்ட் XVI திடீர் பதவி விலகலுக்குப் பின், இவர் 266வது போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.