இலங்கை :இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் 21ம் தேதி நடக்க உள்ள நிலையில், அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் உடனே தள்ளுபடி செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்களிப்புக்கு இலங்கை தயாராகி வருகிறது. நாளை தபால் வாக்கு பதிவு மூலம் அரச அதிகாரிகள் வாக்களிக்கவுள்ளனர்.
தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், பல விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க, விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர்க் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
