மியான்மர் நிலநடுக்கம் : 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா!
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு மக்களுக்கு உதவிட 15 டன் நிவாரண பொருட்களை இந்திய அரசு அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது.

நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது. இதனால் மியான்மரில் 5 நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல இடிந்து விழுந்தன. இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
மியான்மர் மண்டலாவில் உள்நாட்டு நேரப்படி மதியம் 12.50 மணி அளவில் முதல் நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து சில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கமானது வடக்கு தாய்லாந்து முழுவதும், பாங்காக் வரை இந்த நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டது. சீனாவில் தென் மேற்கு மாகாணத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேற்று வெளியான தகவலின்படி 144 பேர் உயிரிழந்ததாகவும் 732 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முதலே மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரித்த வண்னம் இருக்கிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதால் உறுதியான தகவல்கள் கிடைப்பதிலும், மற்ற நாடுகள் உதவி செய்வதிலும் சற்று தாமதம் நிலவி வருகிறது.
இதேபோல தாய்லாந்து, பாங்காங்கிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை அங்கும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாங்காங் கட்டிடத்தில் சிக்கியுள்ள 70க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது.
15 டன் நிவாரண பொருட்கள் :
இந்தியா சார்பில் இருந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவிட, சுமார் 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் கூடாரங்கள், போர்வைகள், உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார பொருட்கள், சோலார் விளக்குகள், ஜெனரேட்டர் செட்கள், அத்தியாவசிய மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் கையுறைகள், பருத்தி துணிகள், சிறுநீர் பைகள் போன்றவை) அனுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.