லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. சொல்லப்போனால், அமெரிக்காவின் முக்கிய தலைகள் தங்கியிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சாம்பலாகி வருகிறது.
லாஸ்ஏஞ்செல்சில் பற்றி எரிந்து வரும் தீக்கு நேற்று வரை 16 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் மேலும் 8 பேர் உடல் கருகி பலியாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் பலர் காணவில்லை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டும் இல்லாமல், பலரது வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. குறிப்பாக, காட்டில் வசிக்கும் விலங்குகள் தீயில் எரிந்து கருகும் காட்சிகள் இதயத்தை உருக்குகிறது. இதனிடையே, உயிர் பயத்தின் காரணமாக பல கோடீஸ்வரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் சேதப்படுத்தும் தீயாக இருக்கலாம் என்று ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், தீ இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.
மேலும் தீ விபத்தினால் ஏற்பட்டிருக்கும் சேதம் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து எரியும் தீயினால் ஏற்பட்ட இழப்பு சுமார் $135 பில்லியன் முதல் $150 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
unknown node