பிரிட்டன் ராணி இறந்தவுடன் பூதமாய் கிளம்பிய கோரிக்கைகள்.! கோஹினூரை தொடர்ந்து கலினன் வைரப்பின்னணி…
ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கலினல் வைரத்தை திருப்பி தர வேண்டும் என தென் ஆப்பிரிக்காவில் கோரிக்கை வலுத்து வருகிறது.
கடந்த 8ஆம் தேதி இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 10 நாட்கள் அரச மரியாதையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ராணியின் உடல் நேற்று முன்தினம் ராஜ மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவர் இறந்த பின்பு , வெவ்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை திரும்ப கொண்டு வர எழுந்துள்ள கோரிக்கையும் ஒன்றாகும்.
அதே போல, ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் தென் ஆப்பிரிக்கா இருந்த காலகட்டத்தில் , அங்குள்ள கலினல் பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட விலையுயர்ந்த வைரம் பிரிட்டன் ராணி செங்கோலில் இருந்துள்ளது.
அதாவது, 1905ஆம் ஆண்டு , இந்த வைரமானது தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டது. அதன் மொத்த தரம் 3,106.7 கேரட் ஆகும். அதில் 530 கேரட் வைரம் ராணி பயன்படுத்திய செங்கோலில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதன் மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில், 3,180 கோடி ரூபாய் ஆகும்.
இதனை திருப்பி தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு வர வேண்டும் என அங்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தென் ஆபிரிக்க முக்கிய அரசியல் பிரபலம், ‘ பிரிட்டன் இப்போதாவது திருந்தி, தாங்கள் திருடிய பொருட்களை மற்ற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.’ என கூறியுள்ளார்.