அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைகளை நாம் நமது நாட்டில் அனுமதிக்க கூடாது என கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் தலைமைத் தேர்தலில், 85.9% வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
ஜனவரி 7-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான விருப்பம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் உள்ள நெருக்கடிகளை ஒப்புக்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் திடீரென அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில் அவரை தொடர்ந்து அடுத்த பிரதமராக யார் ஆகப்போகிறார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வரும் சில நாட்களில் பிரதமராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் தலைமைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு உரையாற்றும்போது முதலிலே அமெரிக்காவை எச்சரித்து தான் பேசினார்.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து கனடாவுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, சீனா, மெக்சிகோ, கனடாவுக்கு 25% சுங்க வரியை விதிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அமெரிக்காவின் உள்நாட்டு தொழில்கள் பாதுகாக்கப்படும் என்பதால் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரியை விதிக்க தான் முடிவு செய்திருப்பதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை நேற்று சந்தித்த கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி ” அமெரிக்கா நம்மளுடைய இயற்கை வளங்களையும், நம்மளுடைய குடிநீரையும், நம்மளுடைய நிலத்தையும், கூடவே முழு கனடா நாட்டையும் அடக்கி ஆள விரும்புகிறது. இது அவர்களுடைய நடவடிக்கையை பார்க்கும்போதே நமக்கு தெரிகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடாவின் தொழிலாளர்களையும், குடும்பங்களையும், வணிகங்களையும் பாதிக்க வைக்கும் விஷயங்களை செய்து வருகிறார். எனவே, அவருடைய நடவடிக்கைகளை நாம் எந்த காரணத்திற்கும் அனுமதிக்கக் கூடாது அவரை தடுக்க வேண்டும். அவர்கள் நமக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தாலும் நாமும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் ” எனவும் மார்க் கார்னி பேசினார்.