சென்னை :அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அது நிகாரிக்கப்பட்டுள்ளது. 4 சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர்கள் சிநேக ப்ரியா, ஜமான் ஜமால், பிருந்தா அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது விசாரணையை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என முன்னதாக செய்திகள் வைரலானது. துணைமுதல்வருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகவும் பரவியது. இதனையடுத்து, பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை எனவும் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என தொடர்ச்சியாக கூறிக்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை? என்கிற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது ” அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை?.
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு? திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா?” எனவும் காட்டத்துடன் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown node