விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? உயர்நீதிமன்றக் மதுரை கிளை கேள்வி?

Default Image

விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்?

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து சென்ற போது, அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, முத்துவின் உடல், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து, 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும், முத்துவின் குடும்பத்தினரை சமாதானப்படுத்த முற்பட்ட நிலையில், சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, முத்துவின் மனைவி, உடலை, மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட  கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் அளித்திருந்த மனுவில், தனது கணவர் இறப்புக்கு காரணமான வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட ஒழுங்கு காரணமாகவே பிரேத பரிசோதனை உடனடியாக செய்யப்பட்டதாக விளக்கமளித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி, மாலை 4 மணக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என விதி உள்ளநிலையில் இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கின் நிலை அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவை சீலிட்டி கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்