வேலைக்கேட்டு மனு;கொரோனா நிதிக்காக 2 பவுன் செயின் கொடுத்த இளம்பெண்- முதல்வர் பாராட்டு..!

Default Image
  • மேட்டூரை சேர்ந்த செளமியா என்ற இளம்பெண்,தனக்கு வேலைக்கேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதிக்காக 2 பவுன் செயினையும்,முதல்வரிடம் கொடுத்துள்ளார். 
  • அதற்கு பாராட்டு தெரிவித்து,முதல்வர் ஸ்டாலின்,பொன்மகளுக்கு விரைவில் வேலை என ட்வீட் செய்துள்ளார்.

நேற்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார்.முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோரும் பங்கேற்றனா்.

இதனையடுத்து,முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் சில மனுக்களை பெற்றார்.அப்போது,சௌமியா என்ற இளம்பெண் ஒருவர்,கொரோனா நிவாரண நிதிக்கு தனது 2 பவுன் செயினையும்,மேலும்,வேலைவாய்ப்பு கேட்டு ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார்.

அக்கடிதத்தில்,சௌமியா கூறியிருப்பதாவது:“இரா. சௌமியா ஆகிய நான் BE. கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டதாரி, எனது தந்தை ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர்.என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.எனது தந்தை பணியில் இருந்து  பெற்ற சம்பளத்தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்து விட்டார்.

நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள் ஆனால், வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 12 .03 .2020 அன்று இறந்து விட்டார்கள்.

எனது தந்தை பணி ஓய்வுப் பெற்ற சேமிப்பு தொகை அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்து விட்டார். அம்மாவை காப்பாற்ற முடியவில்லை, மருத்துவச்செலவு (சுமார் 13 லட்சம்) ஆகிவிட்டது. எங்களுக்கு சொந்தவீடு கிடையாது.ஆகையால், அம்மா இறந்த பிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்து விட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளோம் .

எங்கள் ஆதார் விலாசம் எல்லாமே (30A காவேரி நகர், என்றுதான் உள்ளது) எனது தந்தைக்கு பணி ஓய்வு தொகையாக ரூபாய் 7000/-(ஏழாயிரம்) மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாகை ரூபாய் 3000/- (மூவாயிரம்) போக ரூ.4000/- (நாலாயிரம்) வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். திருமணமாகிய எனது சகோதரிகள் எங்களுக்கு உதவி செய்கின்ற வசதிவாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.

எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலை வாய்ப்பை வாங்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன்.எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,அந்த பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:”மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்