என்ன முடிவு எடுக்கப்போகிறார் ரஜினி ? நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை
நாளை ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில்,அரசியல் குறித்து அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் , ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார்.ஆனால் இந்த சந்திப்புகள் ஒவ்வொரு முறையும் நடைபெறும்போது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் ரஜினி சந்தித்தது தான் மிகவும் முக்கியமான சந்திப்பாகும்.
கடந்த 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திப்பில் நடந்தது என்ன ?
கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.ஏனென்றால் அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது .
எனக்கு முதலமைச்சர் பதவியில் எனக்கு ஆசையே இல்லை என ரஜினி பேச்சு :
இதன் பின்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு.2017-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறவில்லை. 2017 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவதாக கூறினேன்.தேர்தலுக்கு பிறகு அடிப்படைக்கு அவசியமான பதவிகள் மட்டுமே எனது கட்சியில் இருக்கும்.50 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும்.வேலை எதுவும் செய்யாமல் கட்சி பதவியே தொழிலாக பார்க்கிறார்கள்.எனக்கு முதலமைச்சர் பதவியில் எனக்கு ஆசையே இல்லை.1996-ஆம் ஆண்டு கூட எனக்கு வாய்ப்பு வந்தது.ஆனால் நான் விரும்பவில்லை.அனைத்து தகுதிகளை கொண்ட இளைஞர் ஒருவரை அங்கு உட்கார வைப்போம். கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு.ஆட்சி தலைமை சரியாக இல்லை என்றால் கட்சி தலைமை தூக்கி எறியும் என்று கூறினார்.
அண்மையில் வெளியான அறிக்கை ?
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அதற்குள் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது.மேலும் அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதாகவும் அந்த அறிக்கையில் தகவல் இருந்தது. ஆகவே கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.
அறிக்கை வெளியான நிலையில் ரஜினி கூறியது என்ன ?
கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டார்.அதில்,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறினார்.
மீண்டும் சந்திக்க உள்ள ரஜினிகாந்த் :
கொரோனா சமயத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி பொது நிகழ்வில் பங்கேற்காமல் இருந்த ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார். ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில்,நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்துகொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த சந்திப்பில்,அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ரஜினி ரசிகர்களில் ஒரு சிலர் அவர் அரசியல் நிலைப்பாட்டில் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அந்த முடிவு என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று உள்ளனர்.மேலும் ஒரு சிலர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.