யூடியூப் பார்த்து பிரசவம் – உயிரிழந்த குழந்தை!
ராணிப்பேட்டை:அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
யூடியூப் பார்த்து பிரசவம் பார்க்கும் பழக்கம் மக்கள் சிலரிடையே ஏற்பட்டு வரும் நிலையில்,அவ்வாறு பிரசவம் பார்க்கக் கூடாது என்றும்,இதனால் குழந்தை மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என மருத்துவர்கள் தரப்பில் அவ்வப்போது அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில்,அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்து பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு கோமதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.அவர் மனைவி தற்போது பிரசவம் தரித்துள்ளார்.அதன்படி, அவரது மனைவிக்கு கடந்த டிச.13 ஆம் தேதி குழந்தை பிறப்புக்கான டெலிவரி தேதி மருத்துவர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,குறிப்பிட்ட தேதியில் அவர் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.
இந்நிலையில்,கடந்த 18 ஆம் தேதி அப்பெண்ணுக்கு பிரசவ வலி திடீர் என்று ஏற்பட்ட நிலையில்,லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.அப்போது ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
மேலும்,லோகநாதனின் மனைவிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,அவர் தனது மனைவியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு சிகிச்சை அளித்தும் அவரது மனைவியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அருகில் உள்ள அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து,மருத்துவர்கள் அளித்த புகாரின்பேரில் அப்பெண்ணின் கணவர் மீது நெமிலி போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.