2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கியதில் இருந்து அவர் திமுகவை விமர்சனம் செய்து பேசி வந்த நிலையில், அதிமுக குறித்து பெரிதாக பேசவில்லை. எனவே, திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மட்டும் மறைமுகமாக அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுத்து வந்தார்கள்.
அதே சமயம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பெரிதாக விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை. இந்த சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் ” தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் இத்தனை சதவீத வாக்குகளில் வெல்வார் என்பது போல பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் ” பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக பணியாற்றியவர். எனவே, அவர் அவருடைய கருத்தை சொல்கிறார். அது அவுங்க கட்சியோட கருத்து. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்கள் தான் எந்த முடிவுநாளும் எடுப்பார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் திமுகவுக்கு மாற்று என்னவென்றால் அது அதிமுக தான்.
பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் மீண்டும் அம்மாவுடைய அரசு ஆட்சி அமைக்க தான் போகிறது. அதனால் புதிதாக கட்சியை தொடங்கியவர்கள் அவர்களுடைய கட்சி தொண்டர்களை திருப்தி படுத்துவதற்காக இப்படி பேசுவது வழக்கம் தான். இது அவர்களுடைய ஜனநாயக உரிமை இதில் வந்து நீ சொல்லக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது.
2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார்.யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். விஜய் அப்படி ஆசை இருப்பதன் காரணமாக பேசியிருக்கிறார். விஜய் போலவே அமித்ஷாவுக்கும் கனவு இருக்கும்; பாஜகவின் பகல் கனவு பலிக்காது” எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.