விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் 5-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடந்து, தேமுதிக தரப்பில் நவம்பர் 20-ஆம் தேதி அன்று வெளியிடபட்ட அறிக்கையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்று உள்ளார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக கூறும் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்.
இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.