வெற்றி வேல்.. வீர வேல்.. முழக்கத்துடன் உரையை தொடங்கிய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்று பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் வந்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடைபெற்று வரும் பாஜக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வெற்றி வேல்.. வீர வேல்.. முழக்கத்துடன் உரையை தொடங்கிய அமைச்சர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் பெரும்பான்மை பலத்துடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. நாட்டினை நிர்மாணிப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது என்று கூறிய அவர், நான் தமிழில் அதிகம் பேச விரும்பினேன். ஆனால் தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், தமிழ் ஒரு அழகான மொழி என்றும் அனைத்து மொழிகளின் அம்மாவாக திகழும் தமிழை நான் வணங்குகிறேன் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், 1.3 கோடி இளைஞர்களை உள்ளடக்கிய 7.5 கோடி மக்களை கொண்ட தமிழகத்தை தலை வணங்குகிறேன். தொழில் முனைவோரின் ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்டு, வளமான கலாச்சாரம், மிகசிறந்த பாரம்பரியத்தை கொண்ட சேலம் நகரத்திலிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு, இந்தியாவின் வளர்ச்சிக்கான அத்தியாயத்தை எழுத உள்ளோம். நாட்டில் அந்நிய முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பங்குச்சந்தை உச்சம்தொடுவது மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டும் விளையாடுகிறது என தெரிவித்துள்ளார்.