சென்னை :நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தயம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐரோப்பா GT3 கோப்பை கார் பந்தய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.
அதற்கான பயிற்சிகளில் தற்போது படிப்பிடிப்பு இடைவேளைகளுக்கு நடுவே கலந்து கொண்டு வருகிறார். மேலும், அஜித்குமார் ரேஸிங் எனும் கார் பந்தய உபகாரணங்களுக்கான நிறுவனத்தையும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். நேற்று அஜித்குமார் கார் ரேஸிங்கிற்காக பயிற்சி மேற்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படம் ஆகியவை இடம்பெற்று இருந்தன. அதில் அஜித்குமார் ரேஸிங் உபகரணங்களில் தமிழக விளையாட்டு துறையின் (SDAT) சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது.
இதனை குறிப்பிட்டு, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், ” புகழ்பெற்ற 24H துபாய் 2025 மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப் போர்ஷே 992 GT3 கோப்பை ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தமிழகத்தை உலக அரங்கிற்கு அழைத்துச் செல்லும் AjithKumar Racing கார் மற்றும் உபகரணங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சின்னம் பெருமையுடன் காட்சிப்படுத்தப்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த செயலால் எங்களை ஊக்குவித்த அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்திய Formula 4 Chennai Street Circuit மற்றும் இன்னும் பல திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகளை ஆதரித்து, அங்கீகரித்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றுபடுவோம், தமிழகத்தின் விளையாட்டு உணர்வை புதிய உயரத்திற்கு உயர்த்துவோம். உங்கள் வரவிருக்கும் பந்தய போட்டி அனைத்திற்கும் நல்வாழ்த்துக்களும், ” என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
unknown node