“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!
தமிழ் மீது அக்கறை இருந்தால் மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்பிக்களை பார்த்து ‘அநாகரீகமானவர்கள்’ என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்தார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அதனை பின் வாங்கினார்.
திமுக எம்பிகளுக்கும், மத்திய பாஜக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நிலவி வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், கொரோனாவிற்கு பிறகு தமிழ்நாட்டின் கல்வி தரம் பின்தங்கி உள்ளது என கூறினார். மேலும், திமுக எம்.பிகளை அநாகரிகமானவர்கள் என பேசிய தர்மேந்திர பிரதான் பேச்சை திரும்ப பெற வைத்தீர்கள்.
ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் புகைப்படத்தை அனைத்து துறை அலுவலகத்திலும் வைத்து மாலை போட்டு மரியாதை செய்கிறீர்களே என பெரியாரை மறைமுகமாக நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்தார். நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு திமுக எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
விஜய் விமர்சனம் :
பெரியார் பற்றிய விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், ” பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!? குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். மத்திய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே. இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும் என பதிவிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன்…
— TVK Vijay (@TVKVijayHQ) March 12, 2025