அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!
அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் தற்போது திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை குறிப்பிட்டு மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டது.
இதனால், தற்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், அமைச்சர் பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதிரடியாக அறிவித்தார். வழக்கமான திமுக அறிக்கை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடும் வேளையில், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நேரடியாக அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக, அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் தற்போது திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா நியமனம் செய்யப்படுகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி சிவா முன்பு வகித்து வந்த கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது திமுக துணை பொதுச்செயலாளர்களாக கனிமொழி, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோர் பொறுப்பில் உள்ளனர்.