முப்படைத் தளபதி உட்பட உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி – உதகையில் இன்று கடைகள் அடைப்பு!

உதகை:ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,உதகையில் இன்று ஒரு நாள் கடைகள் அடைப்பு.
நேற்று முன்தினம் பிற்பகல் குன்னூரில் காட்டேரி என்ற பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து,நேற்று மாலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவ விமானம் மூலம் முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
டெல்லி பாலம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.மேலும், உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையில்,ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மேலும்,உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு டெல்லியில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,உதகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள்,உணவகங்கள் ஏதும் செயல்படாது என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும்,கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று கடையடைப்பு நடத்தப்படும் என்றும் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025
GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!
March 25, 2025