வேங்கைவயல் விவகாரம் :"சமூக நீதியை திமுக காக்க வேண்டும்." திருமா கோரிக்கை!

வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin

சென்னை :இன்று (ஜனவரி 25) மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களையும், அரசுக்கு தனது கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் 3 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசிய திருமாவளவன், ” வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. அப்பகுதியில் உள்ள காவல்துறை தங்கள் வழக்கமான விசாரணைபடி விசாரிக்க கூடாது என நாங்கள் ஏற்கனவே கூறிவந்தோம்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து இவர்கள் தான் குற்றவாளிகள் என கூறப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். இந்த குற்றப்பத்திரிகையை எதிர்த்து வேங்கைவயலில் இன்று அறப்போராட்டம் செய்ய முயற்சி செய்தோம். அதில் பலரை கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை மிக வன்மையாக கண்டிக்கதக்கது.

தமிழக அரசு சமூக நீதி பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் திமுக நிற்க வேண்டும். சிபிசிஐடி போலிசாரின் குற்றப்பத்திரிக்கையை ஏற்க கூடாது என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். இந்த குற்றப்பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டார்களா என தெரியவில்லை. ” என திருமாவளவன் கூறினார்.

2 ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு வந்த வேங்கைவயல் விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த பட்டியலினத்தவர்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.