இது நாகலாந்து அல்ல, ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு! – சீமான் பதிலடி

Default Image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன என சீமான் பதிலடி.

சென்னை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என குற்றசாட்டினார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும், அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே எனவும் கடுமையாக விமர்சித்தார். ஆளுநரின் பேச்சுக்கு அந்த அமைப்பு உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தற்போது இது நாகலாந்து அல்ல, ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு என ஆளுநர் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து தெரிவித்தக் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன. நாடறியப்பட்ட மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இருப்பதாகவும், ஆபத்தான இயக்கமென்றும் கூறி, அவதூறு பரப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

துளியும் பொறுப்புணர்ச்சியின்றி, ஆளுநரா? ஆர்.எஸ்.எஸ்.ஸின் பரப்புரையாளரா? எனும் கேட்குமளவுக்கு கருத்துகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படையாக முன்னெடுத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்குகள் யாவும் வெட்கக்கேடானது. ஆளுநர் மாளிகையை சங் பரிவாரங்களின் பரப்புரைக்கூடாரமாக மாற்றி, தமிழகச் சட்டமன்றத்தின் மாண்புகளைக் குலைத்து, நாளும் அதிகாரத்தலையீடும், அத்துமீறலும் செய்து, மதப்பூசலை தமிழகத்திற்குள் ஏற்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு, ‘இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்துப் போர் செய்து வென்றிட்ட வீரம்செறிந்த தமிழ்நாடு’ என்பதை நினைவூட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்