திருப்பரங்குன்றம் பதற்றம்.., இன்றும் நாளையும் மதுரையில் 144 தடை!
திருப்பரங்குன்றம் மலைக்கோயில் விவகாரம் தொடர்பாக அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ள்ளதால் இன்றும் நாளையும் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில். இதே திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, இன்னொரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா எனும் இஸ்லாமிய வழிபாட்டு தலமும் உள்ளது.
மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக திகழ்ந்த இந்த திருப்பரங்குன்றம் மலை தான், தற்போது 144 தடைக்கும் காரணமாக மாறியுள்ளது. சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இந்த வருட தொடக்கத்தில் சந்தனக்கூடு திருவிழா முடிந்ததும், அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிடும் கந்தூரி நிகழ்வு நடைபெறபோவதாக இஸ்லாமியர்கள் அறிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழிகளை பலியிட அனுமதிஇல்லை என மதுரை மாவட்ட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆடு கோழிகளை பலியிட கூடாது என இந்து அமைப்பினரும் போர்க்கொடி தூக்கினர். ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் இந்த கந்தூரி நிகழ்வு எப்போதும் நடப்பது தான் என வாதம் செய்து வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதற்கான நோட்டீஸ், சுவரொட்டிகளும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டது. ஆனால், போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து இருந்தனர். இருந்தும் தடையை மீறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் (நாளை இரவு வரை) 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தில் இந்து முன்னணியினர் தவிர மற்ற சில இந்து அமைப்புகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில், போராட்டத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், போராட்டம் நடத்துவதற்கோ, கூட்டம் கூடுவதற்கோ அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.