#BREAKING : உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

- உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- உள்ளாட்சி தேர்தலுக்குத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்.இதனால் கடந்த 7 ஆம் தேதி தமிழக மாநில தேர்தல் ஆணையம்,முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும்,இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தது.மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் தற்போது நடைபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .
பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திமுக,காங்கிரஸ்,மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்று இன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.ஆனால் இதற்கு இடையில் நேற்று தமிழக அரசு சார்பில் ,விதிமுறைகளை பின்பற்றித்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது ,எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.இதில் திமுக வாதத்தில், புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது.தமிழக அரசு சார்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் பொய் என்ற வாதிடப்பட்டது.
இறுதியாக தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.மேலும் 9 புதிய மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் இல்லை.