சென்னை :தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்த நிலையில். மரக்காணத்திற்கு அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே, சென்னை வானிலை ஆய்வு மையம் ஃபெஞ்சல் புயல் காரணமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. புயல் கரையை கடப்பதால் கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அரசும் வலியுறுத்தி இருந்தது. அரசு அவ்வளவு வலியுறுத்தியும் மக்கள் ஆபத்தை உணராமல் தங்களுக்கு ரீல்ஸ் தான் முக்கியம் புகைப்படம் எடுப்பது தான் முக்கியம் என கடற் பகுதிக்கு குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார்கள்.
சென்னை மெரினா கடற்கரை புயலின் காரணமாக மூடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தடைகளையும் மீறி இன்று சென்னை மக்கள் குடுமபத்துடன் சென்று சீறும் கடல் அலைகளுக்கு நடுவே நின்று கொண்டு புகைப்படம் எடுத்தனர். அதைப்போல, பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள கடற்கரையிலும் இளைஞர்கள் பலரும் ஒன்றாக பைக்கில் வந்து துள்ளி குதித்து ரீல்ஸ் எடுத்து வருகிறார்கள்.
இதெயெல்லாம் மிஞ்சும் அளவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு புதுமண ஜோடி ஆபத்தை உணராமல் ஜாலியாக முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில், பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று கூட வேரோடு சாய்ந்தது. அதனை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பகுதியிலும் கடற்கரை கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அந்த பகுதியிலும் பலரும் சென்று புகைப்படம் எடுத்து கொண்டு வருகிறார்கள். அப்படி புதுமண ஜோடி இரண்டு பேர் ஜாலியாக முத்தமிட்டு கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டார்கள். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புயல் கரையை கடக்கும் பகுதி மரக்காணத்தில் என கணிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
unknown node