மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு – இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்துக்காக காத்திருந்த போது, பழமையான சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து விழுந்து, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொழுமம் கிராமத்தில் வேலைக்கு செல்வதற்கு பேருந்துக்காக சமுதாய கூடத்தில் காத்திருந்த மணிகண்டன், கௌதம், முரளி ராஜன் ஆகிய மூவர் அருகே கனமழையால் சேதமடைந்து இருந்த பழமையான மேற்கூரை இடிந்து விழுந்து உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்கூரை இடிந்து விழுந்து…சம்பவ இடத்திலேயே 3 பேர் மரணம்!
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம். கொழுமம் கிராமம், கொழுமம் – பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று (16-10-2023) காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் திரு.முரளி ராஜா, த/பெ.மன்மதன் (வயது 35), திரு.கௌதம், த/பெ.சின்னதேவன் (வயது 29) மற்றும் திரு.மணிகண்டன், த/பெ.பாபு (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து, அவர்களை உடுமலைப்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த மூவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.