ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி;இன்று பார்வையிடுகிறார் ராணுவ தளபதி!

The new Army Commander visits the site of an Army helicopter crash near Coonoor this morning

நீலகிரி:குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை ராணுவ தளபதி எம்.எம்.நரவனே இன்று காலை பார்வையிடுகிறார்.

கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ முகாமிற்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது காட்டேரி நஞ்சப்பாசத்திரம் பகுதியில் உள்ள வனப்பகுதியின் மேலே பறந்து சென்று கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்த கீழே விழுந்து தீ பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,காட்டேரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கமாண்டோ கேப்டன் வருண் சிங் விபத்திற்குப் பிறகு 80 சதவீத தீ காயங்களுடன் வெலிங்டனில் (தமிழ்நாடு) ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து,பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து,இந்த விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே பார்வையிடுகிறார். அதன்படி,காலை 10.30 மணியளவில் வெலிங்டனில் அஞ்சலி செலுத்திவிட்டு விபத்து நடந்த இடத்தை ராணுவ தளபதி பார்வையிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.