பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் பள்ளி குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 08.10 மணிக்கு புறப்பட்டு தவளைப்பட்டி செல்லும்பொழுது கல்லுக்காடு என்ற இடத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பேருந்து விபத்துக்கு ஓட்டுநரே காரணம் என தமிழ்நாடு போக்குவரத்து கழக சேலம் மண்டலம் நிர்வாக இயக்குநர் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேருந்தில் பழுது ஏதும் இல்லாத நிலையில் ஓட்டுநர் செல்போன் பேசியபடி இயக்கியதே காரணம் என விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.