பரபரப்புக்கு மத்தியில் தொடங்கியது திமுக பேரணி

Default Image
  • நேற்று இரவு திமுக பேரணி நடைபெறுமா? இல்லையா ? என்ற சந்தேகம் இருந்து வந்தது. 
  • இதனிடையே இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்று வருகிறது. 

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று (டிசம்பர் 23ஆம் தேதி)  பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் திமுகவின் பேரணிக்கு தடை கேட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்து அதனை அவசர வழக்காக விசாரிக்க நேற்று  கேட்டுக்கொண்டார்.இந்த அவசர வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேரணி போராட்டம் நடத்தலாம். அதற்க்கு  நீதிமன்றம் தடை விதிக்க முடியாது. பேரணி நடந்தால் சாமானியர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட கூடாது. பேரணியை காவல்துறையினர் ட்ரோன் கேமிரா மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அரசு தரப்பில் இதில் விளக்கம் அளிக்கையில், திமுக பேரணி நடத்தினால், அதற்கு திமுகதான் முழுப்பொறுப்பு என்று தெரிவித்தது.ஆனால் இந்த வழக்கில் திமுக பேரணி நடத்தலாம், நடத்தக்கூடாது என எந்தவித உத்தரவையும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை.

இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இந்த பேரணிக்கு தடை கேட்டு அவரச வழக்கு போட்டு எங்கள் பேரணியை விளம்பரப்படுத்திய அதிமுகவுக்கு நன்றி எனவும், அதிமுக சில நபர்களை நீதிபதி வீட்டிற்கே அனுப்பி தடை கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி கூறிவிட்டார். அவருக்கு நன்றி என்று தெரிவித்தார்.

இதற்கு மத்தியில் இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி தொடங்கியது.எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையிலிருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெறுகிறது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 4 ட்ரோன்கள் மற்றும் 110 கேமிராக்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்படுகிறது.மேலும்  தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா, வருண் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்